நாவல்கள், வரலாற்று நாவல்கள், களிப்பூட்டும் கற்பனை உலக நாவல்கள் என அவற்றை வகைப்படுத்தலாம்.
உள்ளீட்டையும் உணர்த்தும் முறையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகள் மிக்க நாவல், பண்பு நலன் விளங்கும் நாவல், விளக்கமும் வருணனையும் மிக்க நாவல், நாடகப் போக்கினதாகிய நாவல் எனவும் அந்த வகை பெருகும்.கதைப்புலம், மாந்தர் படைப்பு, பன்னணி ஆகியவற்றின் அடிப்படையில் சமூகக் கொள்கை பரப்புப் புதினம், சிக்கல்களை அலசும் புதினம், துப்பறியும் புதினம், வட்டாரப் புதினம், புதிய அலைப்புதினம், நாடகப்பாங்கான புதினம், வரலாற்றுப் புதினம் என வகைப்படுத்தும் வழக்கமும் உண்டு.
கிறித்தவர்களும் தமிழில் படைத்த புதினங்களை வரலாற்றுப் புதினங்கள், உரிமைப் போராட்டப் புதினங்கள், குடும்பச் சிக்கற் புதினங்கள், வட்டாரப் புதினங்கள், சாதீயப் புதினங்கள், பெண்மைப் புதினங்கள், நாட்டியற் புதினங்கள், அரசியற் புதினங்கள், திரைப்படப் புதினங்கள், உளவியற் புதினங்கள், சமயப் புதினங்கள், மொழிபெயர்ப்புப் புதினங்கள் எனப் பல்வகைகளில் எழுதியுள்ளனர்.
ஒரு படைப்பாளர், என்றோ நடந்து முடிந்து விட்ட நிகழ்ச்சிகளைத் தம் மனக்கண்முன் நிறுத்தி கதைமாந்தர்களைப் படைத்துத் தம்முடைய கற்பனையைக் கலந்து கலைத்திறன் கொண்டு படைப்பதை வரலாற்றுப் புதினம் . இவற்றில் எக்கால வரலாறு கதை நிகழ்ச்சியாக அமைகிறதோ அக்காலப் பழக்க வழக்கங்கள் ‹ழ்நிலைகள் தக்கவாறு இடம் பெற்றால் புதினம் சிறந்து விளங்கும்.
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகியவற்றில் இடம் பெறும் விவிலிய வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில் கிறித்தவ வரலாற்றுப் புதினங்கள் தோன்றியுள்ளன.
தற்காலக் கிறித்தவத் தமிழ் வரலாற்றுப் புதின ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜெகசிற்பியன், டேவிட் சித்தையா, மதுரை இளங்கவின், கவியழகன், கவிஞர் அமலன், பி.ஏ. தாஸ் ஆகியோர் ஆவர். இவர்களுள் தலை சிறந்தவரான ஜெகசிற்பியன் கிறித்தவராயினும், சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே பனிரெண்டு புதினங்களைப் படைத்துள்ளார். டேவிட் சித்தையா பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வெறும் சிலைகளையும், புதிய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு புதிய வானம் புதிய பூமி என்ற புதினத்தையும் படைத்துள்ளார்.
சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் வரலாற்றை ஒட்டியும், கிறித்தவ அடிகளார் தோமையார் வரலாற்றை ஒட்டியும் பத்துப் புதினங்கள் படைத்தவர் கவியழகன் ஆவார்.
கவிஞர் அமலனின் பரபாஸ் புதிய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது பி.ஏ. தாஸின் ‘இயேசுவின் அருள் பெற்ற மங்கை’ புதிய ஏற்பாட்டில் உள்ள சிறிய வரலாற்றுச் செய்தியினைக் கதை மூலமாகக் கொண்டு கற்பனை கலந்து படைக்கப்பட்டது.மேற்கண்ட புதினங்கள் வரலாற்று நிகழ்ச்சிகளை முழுமையாக அப்படியே எடுத்தாண்டு எழுதப்படுவதும், ஒன்றிரண்டு செய்திகளைக் கொண்டு கற்பனைக் கலந்து எழுதப்படுவதும் இருவகையினைச் சார்ந்தனவாக உள்ளன. கவியழகனின் ‘மண் சிவந்தது’ என்னும் புதினம் வரலாற்று நிகழ்ச்சிகள் மிகுந்து படைக்கப்பட்டது. ஆனால் பி.ஏ. தாஸின் ‘இயேசுவின் அருள்பெற்ற மங்கை’ விவிலியப் புதிய ஏற்பாட்டில் இடம்பெற்ற மேரி மகதலேனாள் பற்றிய மூன்று குறிப்புகளின் அடிப்படையிலேயே படைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இவ்வாறு படைக்கப்பட்ட கிறித்தவ வரலாற்றுப் புதினங்கள் அனைத்தும் சமயம் பரப்பும் நோக்கத்தைக் கொணடனவாக உள்ளன. எனினும் பற சமயத்தினருக்கு உளம் நோகாதவாறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
கிறித்தவப் படைப்பாளர்கள் பலர் புரட்சிகளையும், போராட்டங்களையும் விளக்கும் கருத்துக்களையே தங்கள் படைப்புகளில் அதிகமாகக் காட்டுகின்றனர். இவை ஆண்டான் அடிமைப் போராட்டமாகவும், சாதிசமயப் போராட்டமாகவும், தனிமனிதப் போராட்டங்களாகவும் அமைத்துள்ளன.
டி. செல்வராஜ், ஐசக் அருமைராசன், டேனியல் ஜேக்கப், யோகநாதன், டேவிட் சித்தையா, கார்த்திகா ராஜ்குமார் போன்றோர் புதினங்கள் பல ஏட்டளவில் நின்று, இன்றும் ஏழை மக்களின் கைக்கு எட்டாத மனித உரிமைகளைப் போராடித்தான் பெற முடியும் என்ற உண்மையை எடுத்தியம்புகின்றன. மக்கள் தங்கள் தனி உரிமைக்காகவும், சமுதாய உரிமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கின்ற, போராடித் தீரவேண்டிய நிலைகளைக் காட்டுகின்றன. இவை சாதிவழியில் தொழில் அமைப்பு, தீண்டாமை, வர்க்கப் பாகுபாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
போராட்டங்களை மட்டுமே தமது புதினங்களில் வடித்துக் காட்டுபவர் டி. செல்வராஜ். அவருடைய புதினங்களான தேனீர், மலரும் சருகும், மூலதனம் ஆகிய மூன்றிலும் வர்க்கப் போராட்டங்கள் முதலிடம் பெறுகின்றன.
டேனியலின் ‘பஞ்சமர்’, டேவிட் சித்தையாவின் ‘இனி ஒரு உதயம்’ ஆகிய இரண்டும் ‘சிவப்புக் கிறித்தவப் புதினங்கள்’ என்று குறிப்படப்பட்டுள்ளன. யோகநாதன் தனி மனிதன் அரசின் அடக்குமுறைகளுக்கு எப்படியெல்லாம் பலியாகின்றான்; அப்படி ஒடுக்கப்பட்டும் சளைக்காது எப்படிப் போராடுகிறான் எனத் தம் புதினங்கள் சிலவற்றில் விளக்குகிறார். கார்த்திகா ராஜ்குமார் அரசியல் செல்வாக்கால் தனிமனிதன் செய்யும் அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இளைஞனாக ஆனந்தைப் படைத்து அரசியல்வாதி சொக்கலிங்கத்தைச் சமுதாய நோயாக உருவகப் படுத்தியுள்ளார். அதை வெற்றி கொள்வது எளிதல்ல என்பதை எடுத்துரைத்துள்ளார்.
|
[left]டாக்டர் வி. ஆனந்த மூர்த்தி |
தமிழில் கிறிஸ்துவ நாவல்கள் பற்றிய வரலாற்று ரீதியான மிக முக்கியப் பதிவுகள் கொண்ட நூல்
டாக்டர் வி. ஆனந்த மூர்த்தி
M.A. (Tamil), M.A. (His.) M.A. ((Pol. Sc), M.A.(Eco), M.A. (Pub. Admn), M.A.(Soc.), M.A. (Joul.), M.A. (Phil.), M.A. (Pop.Edun.), M.A. (Gandhian), M.Com., M.Com., (Banking), M.Com., (Insurance). M.Ed., M.Lib.Sc.,Dip. in Telugu& Ph.D
Price: Paper back: Rs.150/=
[இந்த பதிவுகள் யாவும் தாரிணி பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் பற்றியே விளக்கம் தரும். நூல்களில் சில மட்டுமே கைவசமுண்டு. வேண்டினால் உடனே அஞ்சலில் கூரியரில் மற்றும் விமான அஞ்சலில் அனுப்பித்தரலாம்.உரிய விலை மற்றும் அனுப்பும் செலவை ஏற்று மணி ஆர்டர் செய்ய வேண்டும் ]
முகவரி
Dharini Pathippagam, 4A, Ramea Flats, 32/79, Gandhi Nagar 4th Main Road, Adyar, Chennai-600020. Phone no.044-24400135, Mobile: 9940120341 email: vaiyavan.mspm@gmail.com